Saturday, August 24, 2013

கங்காதரரும், விண்வெளியும்

ங்காதரரைத் தெரியுமா உங்களுக்கு? நான் கேட்பது கங்கை நதியைத் தன் ஜடாமுடியில் கட்டிக் கொண்ட சிவனின் வடிவமான கங்காதரரை. சிவன் கோவில்களில் சிற்ப வடிவில் இவரைக் கண்டிருக்கலாம், ஞாபகப்படுத்திப் பாருங்கள்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள 12 நூற்றாண்டுகள் பழமையான கங்காதரர் உங்களுக்காக...

கங்காதரர்
நடுநாயகமாக, முயலகன் என்னும் அரக்கன் மேல் ஒரு காலை வைத்தவாறு ஒய்யாரமாக நிற்பவர் தான் கங்காதரர். அவர் இடது கையினால் தன் ஜடாமுடியின் ஒரு திரியைப் பிரிக்க, கங்கா தாவி வந்து அதனுள் புகுந்து கொள்கிறாள். அவருக்குப் பக்கத்தில் நிற்கும் பார்வதி இக்காட்சியை வியந்து பார்க்கிறாளோ? இந்த சிற்பக் காட்சியில் பங்குபெறும் மற்றவர்கள் கங்காதரின் வலது காலுக்கு அருகில் நின்று சாமரம் வீசும் ஒரு சிவகணம், சிவகணத்தின் தலைக்கு மேலிருக்கும் பாம்பு மற்றும் கங்காதரரின் தலைக்கு அருகில் பின்னங்கால்களை மடக்கி முன்னங்கால்களை நீட்டி உட்கார்ந்திருக்கும் நாய்.

கங்காதரரின் சிற்பத்தில் நாய்க்கு என்ன வேலை? கங்காதரரின் கதையைக் கூறும் புராணங்களில் நாய் பற்றிய செய்திகள் இடம்பெறவில்லை. அப்படியானால் இந்த மர்ம நாய் எதை குறிக்கிறது? இந்த நாய் ஆய்வாளர்களுக்கேப் புரியாதப் புதிராகத் தான் இருக்கிறது. ஆனால் இதற்கு வானவியலோடு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

கிரேக்கப் புராணங்கள், வேட்டைக்காரனாக சித்தரிக்கும் 'ஓரியன்'(Orion) விண்மீன் தொகுதியை நம்மவர்கள் நடராஜரின் விண்வெளி தாண்டவமாக சித்தரிக்கிறார்கள். ஓரியனை கங்காதரராகவும் சித்தரிக்கலாம் (இருவரும் சிவனின் வடிவங்கள் தானே!). ஓரியனின் காலடியில் இருக்கும் 'லெப்பஸ்'(Lepus) விண்மீன் தொகுதி முயலின் வடிவத்தைக் கொண்டது. இதை கங்காதரின் காலடியில் இருக்கும் முயலகனாகக் கொள்ளலாம். நமது சூரிய மண்டலம் அமைந்திருக்கும் பால்வெளி அண்டத்தின்(Milky Way Galaxy) ஒரு பகுதி, ஒரு ஒளிரும் மேகம் போல ஓரியனின் தலைக்குப் பக்கத்தில் தெரியும். நம்மவர்கள் இதைத் தான் ஆகாய கங்கை என்கிறார்கள். இதை கங்காதரரின் தலையில் இறங்கும் கங்கையாகக் கொள்ளலாம்.



ஓரியனின் வலது பக்கத்தில் பெரிய நாய்(Canis Major), சிறிய நாய்(Canis Minor) என இரண்டு நாய் விண்மீன் தொகுதிகள் இருக்கின்றன. சிற்பத்தில் உள்ள நாய் கங்காதரரின் தலைக்குப் பக்கத்தில் இருப்பதால் அதை ஓரியனின் தலைக்குப் பக்கத்தில் இருக்கும் சிறிய நாய் விண்மீன் தொகுதி எனக் கொள்ளலாம்.

கங்காதரர் சிற்பம் பழங்கால மக்களின் வானவியல் அறிவின் பிரதிபலிப்பா? இருக்கலாம். ஆனால், திருச்சியில் இருக்கும் இன்னொரு பல்லவர் கால கங்காதரர் சிற்பத்தில் இருக்கும் நாய் அவரது இடது பக்கத்தில் இருக்கிறது. பல்லவர், பாண்டியர், ராட்டிரக்கூடர்(Rashtrakutha) கால சிற்பங்களில் இடம் பெற்றிருக்கும் இந்த நாய் திடீரென சோழர் கால கங்காதரர் சிற்பங்களில் காணாமல் போய் விடுகிறது.

நன்றி: 'தமிழக வானவியல் சிந்தனைகள்' by முனைவர் ப. ஐயம்பெருமாள்

No comments:

Post a Comment