Sunday, April 14, 2013

சுஜாதாவின் 'வசந்த் வசந்த்'ம் உக்கல் 'ராரா கிணறு'ம்



சுஜாதா அவர்கள் எழுதிய 'வசந்த் வசந்த்' படித்திருக்கிறீர்களா? மிகவும் விறுவிறுப்பான நாவல். அவருடைய 'நைலான் கயிறு'க்குப் பின் நான் படித்த இரண்டாவது துப்பறியும் நாவல். பூனே வரை ரயிலில் தனியாகப் பயணம் செய்த போது நேரத்தைக் கொல்ல வாங்கிச் சென்றது. எதற்காக வாங்கப்பட்டதோ அப்பணியை செவ்வனே செய்தது அந்நாவல். நான் ஒரே நாளில் படித்து முடித்த ஒரே நாவலும் இது தான்.


'வசந்த் வசந்த்' கதையின் மையமே ஒருப் பழங்காலக் கிணறு தான். 'ராஜராஜன் கிணறு' (ராரா கிணறு) எனப்படும் அக்கிணற்றினால் நடக்கும் அடுக்கடுக்கானக் கொலைகள், அக்கிணற்றின் ரகசியம் தங்கப் புதையலா அல்லது வேறேதும் பொருளா எனத் துப்பறியும் கணேஷ், வசந்தின் விசாரணைகள் என ஸ்வாரஸ்யமாக செல்லும் அக்கதை.

கதையில் வரும் ராஜராஜன் கிணற்றைப் பற்றி இணையத்தில் தேடிப்பார்த்த போது அதைப் பற்றி ஒரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே கிணறே ஒரு கற்பனையாக இருக்கலாம் என்று விட்டுவிட்டேன். பல மாதங்கள் உருண்டோடிய பின், சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய சதாசிவ பண்டாரத்தாரின் 'கல்வெட்டும் அதன் உண்மைகளும்' என்ற புத்தகத்தில் ராஜராஜன் கிணறைப் பற்றி ஒரு கட்டுரையைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சியடைந்தேன். கதையில் வருவதைப் போலவே, காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பெருவழியில் 'கூழமந்தல்' என்னும் ஊரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் இருக்கும் 'உக்கல்' என்னும் கிராமத்தில் அந்த கிணறு இருப்பதாகக் கட்டுரை தெரிவித்தது.

கிணறு இருக்கும் இடம், என் பணியிடமான‌ செங்கல்பட்டிற்கு அருகிலே தான் என்பதால் அதனை சென்று பார்த்து வர உடனே திட்டம் தீட்டினாலும் சில வாரங்களுக்குப் பின் தான் நேரம் சரியாய் அமைந்தது. கூடுவாஞ்சேரியில் எட்டரை மணிக்கு கிளம்பிய நான், செங்கல்பட்டு - உத்திரமேரூர் - கூழமந்தல் - உக்கல் என்று சென்றடைய பன்னிரண்டரை ஆகியிருந்தது. பயண தூரம் குறைவு தான், ஆனால் பேருந்துக்கும் ஆட்டோவுக்கும் காத்திருந்த நேரம் அதிகம்.

புவன மாணிக்க விஷ்ணுகிரகம் -
உக்கல்
ராராஜன் காலத்தில் 'விக்ரமாபரண சதுர்வேதி மக்கலம்' என அழைக்கப்பட்ட உக்கலில் ராஜராஜன் கிணறு என்று கேட்டால் யாருக்கும் தெரியவில்லை. கிணறு இருக்கும் 'புவன மாணிக்க விஷ்ணுகிரகம்' என்னும் பெயருடைய பெருமாள் கோயிலைக் கேட்டால் சரியாக வழி சொல்கிறார்கள். அதுவொரு பழங்கால கோயில் என்று காட்டிக்கொள்ள, முழுவதும் கல்வெட்டுகளைத் தாங்கியிருக்கும் அடித்தளமும் சில சிதைந்த மண்டபங்களும் மட்டுமே மீதமுள்ளன.  

கல்வெட்டுகளைத் தாங்கி நிற்கும் அடித்தளம்

கோயிலில் கண்ணயரப் படுத்திதிருந்த உள்ளூர்காரர் ஒருவருடன் பேச்சுக் கொடுத்தேன். அவருக்கு கோயிலைப் பற்றின விஷயங்கள் சிலப்பலத் தெரிந்திருந்தன. அங்குள்ள கல்வெட்டு செய்திகளில் ஒன்றைப் பற்றி கூட சொல்லி என்னை அசத்தினார். அவரிடம் நம் ராரா கிணற்றைப் பற்றி கேட்க (அவருக்கும் கிணற்றின் பெயர் தெரியவில்லை), இரண்டு மாதங்களுக்கு முன் தான் கிணற்றைத் தூர்த்து, மண்ணையும் கோயில் கருங்கற்களையும் சேர்த்து மூடினார்கள் என்று குண்டைத் தூக்கிப் போட்டார். என் அதிர்ஷ்டத்தை நொந்துக்கொள்ள வேண்டியது தான், ராரா கிணறு நான் அங்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன் தான் அழிக்கப்பட்டிருக்கிறது.

ராரா கிணறு இருந்த இடம். இப்போது அது இருந்த சுவடு கூட இல்லை
ராஜராஜன் கிணறு - இது ராஜராஜ சொழனின் ஆட்சிக்காலத்தில், அவரது பணிமகன் கண்ணன் ஆரூரன் என்பவரால் அமைக்கப்பட்டு தண்ணீர் இறைப்பதற்காக விடப்பட்டிருக்கிறது. இச்செய்தியை கோயில் கல்வெட்டு சொல்கிறது. அதுமட்டுமல்லாமல் கிணற்றில் நீர் இறைப்பவனுக்கும், மண்பாண்டங்கள் தருபவனுக்கும் இவ்வளவு நெல் கூலி, கிணறு பழுதடைந்தால் அதை சரி செய்ய இவ்வளவு நெல் 'புதுக்குபுறம்' என்ற செய்திகளையும் சொல்கிறது.

கூழமந்தலில் இருக்கும் ராஜேந்திர சோழன் காலத்துக் கோயிலொன்றை நன்றாகப் பாதுகாத்து வரும் தொல்பொருள்துறையினர், அதற்கு பக்கத்திலேயே இருக்கும் அதனை விட பழமையான உக்கல் கோயிலையும் கிணறையும் ஏன் பாதுகாக்கவில்லை என விளங்கவில்லை. எழுத்தாளர் சுஜாதா அவர்களும் தன் 'வசந்த் வசந்த்' உருவாக மிகவும் உதவிய பண்டாரத்தாரின் கட்டுரைக்கு நாவலின் முன்னுரையில் ஒரு நன்றியை சொல்லியிருக்கலாம்.

பெருவழி - சாலை
பணிமகன் - வேலைகாரன்
புதுக்குபுறம் -Cost for Repairing
இவை ராரா கிணற்றைப் பற்றின கல்வெட்டில் வரும் செந்தமிழ் சொற்கள்.

உக்கல் கோயிலைப் பற்றியும், புகைப்படங்களையும் இங்கே காணலாம்.

2 comments:

  1. நாவலை வாசித்து அதில் வந்த கிணற்றைத் தேடிப் பார்த்து பயணித்த உங்களை பாராட்டுகிறேன். நம் அருகில் உள்ள பழமையான இடங்கள் கவனிப்பாறற்று போவது சங்கடமான விசயம். நம் தேடல்களை ஆவணப்படுத்துவதுடன் அடுத்த தலைமுறையும் அவைகளைக் காக்க முயற்சி செய்ய வேண்டும்.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. // நம் தேடல்களை ஆவணப்படுத்துவதுடன் அடுத்த தலைமுறையும் அவைகளைக் காக்க முயற்சி செய்ய வேண்டும்.
      சரியாகச் சொன்னீர்கள்.

      மிக்க நன்றி சித்திரவீதிக்காரரே

      Delete